திங்கள், 14 மார்ச், 2011
எதற்கும் அஞ்சாதே, எதனையும் வெறுக்காதே, யாரையும் பகைக்காதே
உனது ஆத்மாவையே அனைத்திலும் காண்; எதற்கும் அஞ்சாதே, எதையும் வெறுக்காதே, யாரையும் பகைக்காதே. உலக அரங்கில் உன் பங்கை வலிமையோடும், துணிவோடும் ஆற்றிடு. அவ்வாறே நீ உனது உண்மையான இயல்பின்படி இருப்பாய், வெற்றியானாலும், தோல்வியானாலும், சாவானாலும், சித்ரவதையானாலும் அனைத்திலும் தெய்வமாகவே இருப்பாய் - தெய்வத்திற்குத் தோல்வி ஏது? சாவு ஏது?
மீண்டும் உனக்குச் சொல்கிறேன், வலிமையுடையவனும், துணிவுடையவனுமே கடவுளை அடைவான். கோழையும், பலவீனனும் கடவுளை அடைவதில்லை.
வான வீதி எங்கனும் நட்சத்திரங்களைப் பரப்பி வைத்தவனும், மாலை மாலையாக ஞாயிறுகளை கோர்த்து வைத்தவனும் நீயே. இன்று என்னுள் உள்ள உனக்குச் செவி சாய்த்துக் கொண்டிருக்கின்ற நீயே, பழமையான அந்த யோகத்தின் சக்தியால், செயலற்ற மோனத்தில் நிற்கும் இச்சா சக்தியால் நீயே இவற்றைச் செய்தாய். பழமையான யோகத்தின் செல்வனே, ஏறிட்டுப் பார், நடுக்கத்தை விடு, சந்தேகத்தை ஒழி, அச்சமும், ஐயமும், கவலையும் உன்னைத் தீண்டாதொழிக. தனது மூச்சுக் காற்றால் அண்ட கோளங்களை ஆக்கவும், அழிக்கவும் வல்லவன் ஒருவன் உன்னுள் வதிகின்றான் என்பதை மறவாதே.
எல்லா உயிர்களிடத்தும் தன்னையே காண்பவன் எப்படிப் பகைக்க முடியும்? அவன் எதனிடம் இருந்தும் அஞ்சியோ, கூச்சமுற்றோ ஒதுங்குவதில்லை. அவனுக்கு எதனிடத்தும் அச்சமோ, வெறுப்போ கிடையாது. அதோ எல்லா மனிதரும் வெறுத்தொதுக்கும் தொழுநோய் கொண்டவன் - ஆனால் என்னால் அவ்வாறு ஒதுக்க முடியுமோ? கடவுளன்றோ இந்த விநோத வேடம் புணைந்து சிரிக்கின்றான்.
உன்னை வாளால் வெட்டி வீழ்த்துவேன், குண்டுகளால் துளைத்திடுவேன், நெருப்பில் பொசுக்கிடுவேன், பீரங்கி வாயில் வைத்து கொளுத்திடுவேன் என்றா சொல்கிறாய்? நான் வெட்ட முடியாதவன், பிளக்க முடியாதவன், துளைக்க முடியாதவன், எரிக்க முடியாதவன், நான் அசைவற்றவன், நான் அணிந்துள்ள அன்னமய கோசமாம் சட்டையை மட்டுமே உன்னால் கிழிக்க முடியும் - நான் எப்பொழுதும் இருந்தது போலவே இருப்பேன். உன் மீது கோபம் கொள்ளக்கூட மாட்டேன். குழந்தை விளையாட்டில் அல்லது சிறுபிள்ளை கோபத்தில் ஆடையை கிழித்துவிட்டது என்பதற்காக கோபப்படுவார்களோ.
சாதாரண மனிதர்கள் கூட நாயிலும் கழுகிலும், பாம்பிலும் தேளிலும் தங்கள் ஆன்மாவைக் காண்கின்ற, சாவை என் சகோதரனே என்றும், அழிவை என் சகோதரியே என்றும் அனைத்துக் கொள்கின்ற, அதற்கும் ஒரு படி மேலே சென்று சாவும், அழிவும் நாமன்றி வேறில்லை என்றே அழுகின்ற நாள் ஒன்று வந்தே தீரும். "சர்வ பூதேஷு ஆத்மானாம்" என்று மறை சொல்கிறதே.
எனது மனைவி மடிந்துவிட்டாள் என்று அழுவேனா? அவள் எங்கே போய்விட்டாள்? அன்று அவள் உடல் எனது அணைப்பில் இருந்ததற்போலவே இன்றும் என்னுடன் மிக நெருங்கி இருக்கின்றாள். ஏனெனில் அவளது ஆத்மாவும், என்னுடைய ஆத்மாவும் ஒன்றே அன்றோ?
உள்ளது ஒரே ஆத்மாவே என்ற ஞானம் வந்தபோது வேறுபாடுகளெல்லாம் பறந்துபோம். எல்லையற்ற அமைதி, அளக்க முடியாத அன்பு, கரைகாணா கருணை, முடிவற்ற சகிப்புத்தன்மை இவையெல்லாம் கடவுளைக் கண்ட தீரான்மாவின் இயல்பானத் தன்மைகளாம்.
மொழிபெயர்ப்பு : ச. மகாலிங்கம்
வைகறை இதழில் இருந்து.
சிவலிங்க உருவை நினைவூட்டும் நாகலிங்கபூ!!!
சிவலிங்க உருவை நினைவூட்டும் நாகலிங்கபூ

சிவாலயங்களில் கருவறையில் மட்டுமின்றி, உள் மற்றும் வெளிப் பிராகாரங்களிலும் சிவபெருமானின் அருவுருவ வடிவமாகத் திகழும் சிவலிங்கத்தை நாம் தரிசிக்கிறோம். பொதுவாக சிவலிங்க மூர்த்தத்தைத் தரிசிக்கும்போது பக்தர்கள் மனதில் ஒரு உன்னதமான பக்தியும் மனநிறைவும் ஏற்படுகிறது. கருவறையில் உள்ள சிவலிங்கத்திற்கு "நாகாபரணம்' எனப்படும் வெள்ளி அல்லது தங்கத்தாலான அணிகலனை சார்த்தி, அதன்மீது அலங்காரங்கள் செய்யும்போது, சிவலிங்கத்தின் கம்பீரமும் வனப்பும் நம் நெஞ்சை அள்ளுகின்றது.
நாகாபரணம் சார்த்தப்பட்ட சிவலிங்கத்தைப் போன்றே அமைப்புள்ள ஓர் அழகிய மலர்தான் நாகலிங்கப்பூ ஆகும். இந்த மலரை தெலுங்கு மொழியில் "நாகமல்லி' என்றும்; "மல்லிகார்ச்சுனம்' என்றும் அழைக்கின்றனர். அழகிய வட்ட வடிவமான வெண்மைநிற ஆவுடை, அதன் நடுவில் சிறிய பாணலிங்கம், சிவலிங்கத்தின்மீது கவிழ்ந்து குடை பிடிப்பது போன்ற எண்ணற்ற தலைகளையுடைய நாகம், ஆவுடையாரைத் தாங்குவதுபோல் குங்கும நிறத்தில் ஐந்து இதழ்கள்- இத்தகைய தோற்றம் கொண்ட ஒரு அழகான மலர்தான் நாகலிங்கப் பூ.
"பிரேஸில்நட்' என்ற குடும்பத்தைச் சேர்ந்தது நாகலிங்க மரமாகும். இந்த மரம் நம் நாட்டைச் சேர்ந்ததல்ல! தென் அமெரிக்காவின் பிரேஸில் நாட்டிலிருந்து இந்தியாவிற்கு வந்த பலவகை மரங்களில் இதுவும் ஒன்றாகும். கரடுமுரடான மேல்பட்டை யுடன் தூண்போல உயர்ந்து வளரும் தன்மையுடையது இந்த மரம். இதில் ஆரஞ்சு, குங்கும நிறம், இளஞ்சிவப்பு ஆகிய நிறங்களில் மலர்கள் மலர்கின்றன. இந்த மலர்கள் பீரங்கி குண்டுகளைப் போன்று உருண்டு திரண்ட காய்களாக மாறுகின்றன. இதனால் இந்த மரத்திற்கு பீரங்கி குண்டு மரம் (கானன் பால் மரம்) என்று பெயர் ஏற்பட்டது. மரத்தைச் சுற்றிலும் ஒட்டிக்கொண்டிருக்கும் தவிட்டு நிறக் காய்களைப் பார்த்தாலே சந்தோஷமாக இருக்கும்.
நாகலிங்க மலரானது, நாகாபரணத்து டன் திகழும் சிவலிங்கத்தை நினைவுபடுத்துவதால், பல சிவாலயங்களில் இது வளர்க்கப்படுகிறது. பூக்கள் பூஜைக்குப் பயன்படுத்தப்பட்டு பக்தர்களுக்குப் பிரசாதமாக விநியோகிக்கப்படுகின்றன. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், நாகர்கோவில் நாகராஜர் ஆலயம் போன்ற இடங்களில் இந்தப் பூக்கள் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டு ஆலயங்களில், அப்பகுதியில் அதிக அளவில் காணப்படும் ஒரு மரம் ஆலயத்தின் தலவிருட்சமாகப் போற்றப்பட்டு வருவதும், அந்த மரத்தின் பெயரை ஒட்டியே ஆலயத்தின் பெயர் அமைந்திருக்கும் என்பதையும் நாம் அறிவோம். ஆனால் நாகலிங்க மரம் நம் நாட்டைச் சேர்ந்தது அல்ல என்பதால், இது எந்த தலத்திலும் தல மரமாக இல்லை. இந்த மலரை நாம் நம் உள்ளங்கையில் வைத்துப் பார்க்கும்போது ஒரு அழகிய சிவலிங்கத் திருமேனியை நாம் நம் கையில் வைத்திருப்பது போன்ற ஒரு மென்மையான உணர்வை அனுபவிக்க முடியும்!
பூமிக்கு ஒலியுட்ட வந்த தேவதை ஸ்ரீ அன்னை
அன்னையின் குழந்தைப் பருவத்தில் நடந்த சில சம்பவங்கள் உணர்வுப்பூர்வமாக அமைந்தவை ஆகும். இதுபற்றி விளக்குகிறார் சென்னை மேற்கு மாம்பலம், அயோத்யா மண்டபம் அருகே உள்ள ஸ்ரீஅரவிந்தர் அன்னை தியான மையத்தைச் சேர்ந்த
ஸ்ரீ அன்னை அடிகள்.
அன்னை எப்போதும் உள்நோக்குடைய குழந்தையாகவே இருந்திருக்கிறார் என்பது அவரின் நான்காவது வயதின்போதே வெளிப்பட்டது. அந்த நான்கு வயதில் அவர் அமர்வதற்காக அவருக்கென்று பிரத் யேக நாற்காலி ஒன்று செய்யப்பட் டது. அதில் மௌனமாக அமர்ந்து கொண்டு, தன்னுடைய மூளையை அதிவேகமாகச் சுழலச் செய்யும் அற்புதப் பேரொளி தனக்குள் இறங்கு வதாக அவர் சாதகம் செய்வார். அவருடைய தாயாரோ பகுத்தறிவா ளர். அதனால், தன் மகளின் தன் வயப்பட்டிருக்கும் நிலையைப் பார்த்து எரிச்சலடைந்ததும் உண்டு.
""உலகமே உன்னை அமுக்குவது போல, ஏன் இப்படி முகத்தை ஆடாமல் அசையாமல் வைத்திருக்கிறாய்?'' என்றார் ஒருநாள்.
அதற்கு ஸ்ரீ அன்னை அளித்த பதிலில் ஆன்ம ஆழம் இருந்தது... ""ஆமாம்; உலகின் துக்கமெல்லாம் என்னை அழுத்துவதை நான் உணரத் தான் செய்கிறேன்'' என்று அன்னை பதிலளித்தார். காரணம் அவரின் மேலிருந்து பாயும் பேரொளி... அதுவே பிற்காலத்தில் அவர் சிரத்தைச் சூழ்ந்திருந்த பிரபையாக மாறியது. அதனை இறுதிவரை உணர்ந்தி ருந்தார் ஸ்ரீ அன்னை.
""என்னுடைய குழந்தைப் பருவம் முதல், என் வாழ்வின் இறுதி வரை இதைப் பார்த்திருக்கிறேன். இதை அனுசரித்தே வந்திருக்கிறேன். இதுவே எனக்கு வழிகாட்டியாகவும் இருந்தி ருக்கிறது'' என்று அன்னையே கூறியிருக்கிறார்.
உலகத்திற்கும் மனித இன மேம்பாட்டிற்கும் ஒளிமயமான மகோன்னத எதிர்காலம் பற்றிய உணர்வில் அவருடைய குழந்தைப் பருவம் உருமாற்றமடைந்தது என்பதே உண்மை! உள் வயப்படும் உணர்வு பொதுவாகவே அவருடைய வாழ்க்கைச் சம்பவங்களிலிருந்து தெரிய வருகிறது. அவருக்கு சுமார் பன்னிரண்டு வயதானபோது அவருக்குள் ஒரு சூசகமான உணர்வு அமைந்தது. அதாவது... ஆர்வமிக்க மக்களைத் தலைமை தாங்கிப் புதுயுகமொன் றுக்கு அழைத்துச் செல்லும் முன்னோடியாக தான் விளங்க இருக்கும் உணர்வே அது...
""பதினோரு வயதிலிருந்து பதின்மூன்று வயதிற்குள் எனக்குத் தொடர்ச்சியாகப் பல ஆன்மிக- ஆவியூடாடிய தரிசனங்கள் தோற்றமா யின. ஆண்டவன் உள்ளார் என்றும், மனிதன் அவரைச் சந்திக்க வாய்ப்பு உண்டு என்ற உணர்வும் ஏற்பட்டது. ஒவ்வொருவரும் தன் பிரக்ஞையில் ஆண்டவனை முற்றுமாக உணர்ந்து, ஒரு தெய்வீக வாழ்க்கை வாழலாம் என்று புலப்பட்டன'' என்றார் அன்னை.
அறிதற்கரிய இந்த உணர்வுகளே ஸ்ரீஅன்னை யின் இளமைப் பருவத்தில் இதயத்தை வருடிய தாக அமைந்தன. அதனால் ஒவ்வொருவரும் உணர்வின் உருமாற்றம் பெற்று தெய்வீக நற்பண்புகளுடன் திகழ்வதற்காகவே அனைவருக் கும் அழைப்பு விடுக்கிறார் ஸ்ரீ அன்னை.
அதுமட்டுமா?
உணர்வின் உருமாற்றத்திற்குப் பின்னர், உலகத்தையே உருமாற்ற வேண்டும் என்பதே அவரது நினைவு. பரமாத்மாவை வெளிப் படுத்தும் பரிபூரணக் கருவி யாக என்றும் விளங்க வேண்டும். அதன் மூலமாக அதிகமான வெற்றியும் வெளிப்பாடும் மற்றும் உருமாற்றமும் உடனடியாக நிகழ வேண்டும். அற்புதமான இப்புவியின் அனைத்து வகையான நிகழ்கால- எதிர்காலத் துன்பங்களும் அறவே நீங்கிவிட வேண்டும். ஸ்ரீ அன்னையின் விருப்பம் இதுவே!
அதற்காக ஓர் ஒளி பொருந்திய பாதையில் அனைவரையும் அழைத்துச் செல்வதே அவரது உன்னத அவா. அதுவே அவரது தியானம், உணர்வு, ஆவல், தரிசனம், கனவு- அனைத்துமே! தெய்வீக வாழ்வு பூமியில் மலர்வது உறுதியே என உணர்த்தும் வகையில் இறைவனுடன் ஒன்றிப்போகும் தருணங்கள் பல அவரிடம் தென்பட்டிருக்கிறது.
ஏறத்தாழ இருபது ஆண்டுகளாக அவர் எழுதி வந்த குறிப்புகளே ஓர் ஆன்மிகக் காவியம்.
""மாந்தர் எவ்வளவோ துக்கமுற்றிருக்கின்றனர். அறியாமையில் ஆழ்ந்திருக்கின்றனர். எவ்வ ளவோ உதவி அவர்களுக்குத் தேவைப்படுகிறது...
இறைவனே!
எல்லாருக்கும் அமைதியும் ஒளியும் அளிப்பா யாக... உலரட்டும் கண்ணீர்! தீரட்டும் கஷ்டம்! மறையட்டும் வேதனை! மாறட்டும் சோதனை! உறையட்டும் அமைதி! உறுதிபடட்டும் மனம்! உன்னிடம் கதறிக் கேட்கிறேன்... அனைவர்தம் சோகத்தையும் சுட்டெரி. இந்த இதயங்களுள் மகிழ்ச்சி ஒளியைச் செலுத்து. அதனை ஒளியாக மாற்றக்கூடிய வல்லமையை அருள்புரிக!''
தெய்வீக அன்னையின் திருவுள உணர்வுகள் அனைத்தும் இந்த உலகத்திற்காக உருவானது. அவருடைய முயற்சிகள் ஒவ்வொன்றும் மனித வாழ்வில் தெய்வ இணைப்பை ஏற்படுத்துவதற்கு உகந்தவை. இந்த உணர்வுடன்கூடிய மாற்றமே யோக சாதனையின்போது வெளிப்பட்டு உன்னதமாகிறது. பொலிவு தருவதான உணர்வின் உருமாற்றத்தால் புதியதோர் வாழ்க்கையில் புகுவதே மனிதனின் இன்றைய முதற்கடமை. முழுமையான - நிறைவான உணர்வின் வெளிச்சத் தால், தெய்வீகப் பேரொளிப் பிழம்பான கடவு ளைக் காண்பதற்கான தருணம் வந்துவிட்டது. அதன்பொருட்டு மேலிருந்து பூமிக்கு இறங்கி வந்த ஒரு தேவதையே அன்னை! பூமிக்கு ஒளியூட்ட வந்த அந்த தேவதையின் ஆன்மிக அனுபவமே வேத அனுபவம்.
வேதத்திலும் புராணத்திலும் சொல்லப்பட்ட "பூமியுடன் தெய்வத் தத்துவம் சங்கமம் ஆகும்' என்னும் இந்த வாக்கே தெய்வீக அன்னை வழிகாட்டு வது. இறைவனின் உணர்வில் இடையறாமலிருக்க ஸ்ரீ அன்னை யின் வாசகமே திருவாசகம்.
""இறையருளே!
என் காணிக்கையை ஏற்பாயாக. என் எண்ணங்களும், என் உணர்ச்சிகளும், என் வாழ்வில் எல்லா அசைவுகளும், என் உடலில் ஒவ்வொரு அணுவும், என் உதிரத்தின் ஒவ்வொரு சொட்டும் உன்னுடையதேயாகும். நான் முழுவ தும் முற்றும் ஒரு தயக்கமுமில்லாமல் உன்னுடைய வளே. எனக்கு நீ என்ன முடிவெடுத்தாலும் எல்லாம் உன்னுடையதே. வாழ்வோ சாவோ, இன்பமோ துன்பமோ- வரும் எதையும் நான் வரவேற்பேன்.''
அகமும் புறமும் ஒளிவீசும் சூழ்நிலையில் மனிதத் தன்மையை எளிதாக மாற்றிவிட இயலாது. அதற்குத் தேவையானதையெல்லாம் அளிப்பவரே ஸ்ரீஅன்னை. மனிதனின் புதுப் பிறப்பிற்கு அன்னையின் கருணைக் கடாட்சம் தான் உகந்த வழி. அவரருளாலே அவர் தாள் வணங்கிதான் அனைத்தும் அரங்கேற வேண்டும். அப்படிப் பட்ட உணர்வு ஒன்றே உணர்வின் உருமாற்றத் திற்கு அடிப்படையானது. "அதனை நடத்த வேண்டி யது நாளை அல்ல... அதிலும் இன்றே!' என்கிறார் ஸ்ரீ அன்னை அடிகள்.
நன்றி - நக்கீரன்
உங்களால் ஆகாத செயலும் உண்டோ?
தீர நெஞ்சுடையோராலேதான் துன்பத்தைக் கண்டு சிரிக்க முடியும், எப்பொழுதும் புன்முறுவலோடு இருக்க முடியும்; மனமார்ந்த மகிழ்ச்சிக் குரலைவிட இதமானது (Cordial) வேறொன்றும் இல்லை. ஆங்கில மொழியில் Cordial என்ற சொல்லும் Courage என்ற சொல்லும் ஒரே வேரிலிருந்து தோன்றியவை. உள்ளத்திலிருந்து எழும் மகிழ்ச்சிக்குரல் இக்கட்டான வேளைகளில் ஒருவகைத் துணிவைத் தரும்.
எப்பொழுதும் ஒருவன் சிரித்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. ஆனால் மலர்ச்சியும் அமைதியும் கூடிய மனநிலை, உள்ளத்திலே ஓர் உவகை இவை எப்பொழுதும் விரும்பத்தக்கவைகளே. இக்குணங்களால் எத்தனை அரிய தொண்டுகளெல்லாம் நிறைவேறுகின்றன!
இக்குணங்களால்தான் ஒரு தாய் தன் வீட்டை குழந்தைகளுக்கு ஓர் இன்பப் பூங்காவாக ஆக்குகிறாள், மருத்துவமனைகளிலே தாதிகள் நோயாளிகளை விரைவில் குணமடையுமாறு செய்கின்றனர், ஒரு முதலாளி தம்மிடம் வேலை செய்யும் தொழிலாளிகளுக்கு அவர்கள் செய்யும் வேலை பெரும் பாரமாகத் தெரியாதபடி செய்கிறார், தொழிலாளிகள் பணி நேரத்தில் ஒருவருக்கொருவர் உற்சாகமூட்டுகின்றனர், தொலைத்தூரப் பயணி கடினமான பாதை வழியே தனது சகாக்களைக் அழைத்துச் செல்கிறான், தேசபக்தன் தேசமக்களின் உள்ளத்தில் நம்பிக்கை அணைந்துபோகாமல் காக்கிறான்.
இன்பக் குழந்தைகளே, நீங்கள் எப்பொழுதும் மனமகிழ்ச்சியுடனிருந்தால் உங்களால் ஆகாத செயலும் உண்டோ?
-அன்னை
புதன், 9 மார்ச், 2011
அன்னையின் வாழ்வில்…
அன்னையின் வாழ்வில்…
ஓம்.
பிரான்ஸில் பிறந்த மிர்ரா இந்தியா வந்தடைந்து, அரவிந்தரிடம் சரணடைந்து அனைவரும் போற்றும் ஸ்ரீ அன்னையாக உயர்ந்தார். நேர்மையுடனும், சத்தியத்துடன் அனைவரும் வாழ வேண்டும் என்று வலியுறுத்திய அவர் உண்மையைப் போற்றினார். சாதகர்கள் ஆன்ம உயர்வடைய உதவினார். மனிதர்கள் மட்டுமல்லாது விலங்குகள் மீதும், மரங்கள் போன்றவற்றின் மீது அன்னை கருணை மிக்கவராக விளங்கினார்.
அரவிந்தர் ஆசிரமத்து பங்களா ஒன்றில் வயதான பரந்த மாமரம் ஒன்று இருந்தது. அது மிகவும் பரந்து விரவி, அருகிலுள்ள மற்ற மரம் செடி, கொடிகளை வளர விடாமல் தடுத்துக் கொண்டிருந்தது. இதனால் அதை வெட்டி விட வேண்டுமென்றும் ஸ்ரீ அன்னையிடம் அதற்கான உத்தரவை மறுநாள் பெற வேண்டும் என்றும் ஆசிரமப் பாதுகாவலர் நினைத்தார்.
மறு நாள் ஸ்ரீ அன்னையிடம் சென்று இது பற்றிக் கூறினார். அதற்கு ஸ்ரீ அன்னை ‘இது பற்றித் தனக்கு முன்பே தெரியும்’ என்றும், ‘மரத்தில் வாழ்ந்து வந்த ஒரு தேவதை, மரத்தை வெட்டிவிட வேண்டாமென்று நேற்று இரவு வந்து தன்னிடம் கேட்டுக் கொண்டதாகவும், ஆகவே மரத்தை வெட்ட வேண்டாமென்றும்’ கூறி தடுத்து விட்டார்.
அந்த அளவுக்கு கருணை உள்ளம் கொண்டவராக ஸ்ரீ அன்னை திகழ்ந்தார்.
****
ஆசிரமத்தில் பல மரங்கள் இருந்தன. அவற்றுள் யூக்லிப்டஸ் மரமும் ஒன்று. ஒரு முறை புதுவையில் வீசிய கடும் புயலால் பல மரங்கள் பாதிக்கப்பட்டன. சில வேரோடு பெயர்ந்து விழுந்தன. அந்தவகையில் ஆசிரமத்தில் இருந்த யூக்லிப்டஸ் மரமும் மிகவும் பாதிக்கப்பட்டது.
அந்த மரத்தின் தேவதை ஸ்ரீ அன்னையிடம் சென்று, தான் மிகவும் தனிமையால் வாடுவதாகவும், சக நண்பர்களைப் பிரிந்து வருந்துவதாகவும் தெரிவித்தது. உடனே அந்த தேவதைக்கு ஆறுதல் கூறிய ஸ்ரீ அன்னை, அதற்குத் துணையாக மற்றொரு யூக்லிப்டஸ் மரத்தை நடுவதற்கு ஏற்பாடு செய்தார். அது முதல் அந்தப் பழைய மரம், நன்கு துளிர் விட்டு செழித்து வளர்ந்தது.
மனிதர்களுக்கு மட்டுமல்ல; மரங்களுக்கும் கருணை காட்டக் கூடிய தாய் தான் ஸ்ரீ அன்னை.
அன்னை உள்ளமே
அது அன்பின் இல்லமே!
அடைக்கலம் தருபவர்
ஆசி வேண்டுவோம்
அன்னை போற்றி
அன்னை போற்றி
அன்னையே என்றும் போற்றி
மேலும் ஸ்ரீ அன்னை பற்றி அறிய…
ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாயா
ஓம் ஸ்ரீ ஆனந்தமயி
ஓம் ஸ்ரீ சைதன்ய மயி
ஓம் ஸ்ரீ சத்யமயி பரமே!
செவ்வாய், 1 மார்ச், 2011
OUR WORLD IS NOT THE ONLY ONE

OUR WORLD IS NOT THE ONLY ONE
Science is yet to realize and establish there are millions and millions of worlds like ours in the galaxy . Mother Aurobindo consoles the devotees in all the worlds and provides an umbrella of comfort and protection from their miseries and agonies.